சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

10.806   திருமூலர்   திருமந்திரம்

-
நனவாதி தூலமே சூக்கப் பகுதி
அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.


[ 1]


நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோடல் நற்செய்தி யானதே.


[ 2]


செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதற் றிருமேனி குணம்பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.


[ 3]


ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம்
ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம்
போதம் கலைகா லமேநியதி மாயையும்
நீதி அராகம் நிறுத்தினன் என்னே.


[ 4]


தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே.


[ 5]


Go to top
ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.


[ 6]


பசுக்கள் பலவண்ணம் பால்ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடின்
பசுக்கள் தலைவனைப் பற்றி யிடாவே.


[ 7]


உடல் இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடல்ஒன் றகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.


[ 8]


தற்றெரி யாத அதீதம்தன் ஆணவம்
சொற்றெரி கின்ற துரியம்சொற் காமியம்
பெற்ற சுழுத்தி பின்பேசுறும் காதலாம்
மற்றது உண்டி கனாநன வாதலே


[ 9]


நனவிற் கனவில்லை ஐந்தும் நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனில்நுண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.


[ 10]


Go to top
ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா
ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.


[ 11]


மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச்
சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால்
ஆய தனுவின் பயன்இல்லை யாமே.


[ 12]


அதீதத் துரியத் ததீனாம் ஆன்மா
அதீதத் துரியத் ததனால் புரிந்தால்
அதீதத் தெழுந்தறி வாகிய மானன்
முதிய அனலின் துரியத்து முற்றுமே.


[ 13]


ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில்
மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.


[ 14]


புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கால் துரியமே.


[ 15]


Go to top
நனவில் நனவு புலனில் வழக்கம்
நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்திஉள் நாடல் இலாமை
நனவில் துரியம்அதீதத்தூண் நந்தியே.


[ 16]


கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டமறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாத காணல்
அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.


[ 17]


சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்திக் கனவுதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.


[ 18]


துரிய நனவாம் இதம்உணர் போதம்
துரியக் கனவாம் அகம்உணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியத்
துரியம் பரம் - எனத் தோன்றிடுந் தானே.


[ 19]


அறிவறி கின்ற அறிவு நனவாம்
அறிவறி யாமை அடையக் கனவாம்
அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
அறிவறி வாயின தான துரியமே.


[ 20]


Go to top
தான்எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்து பின்
தான்எங்கு மாய்நெறி நின்(று) அது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலீடே.


[ 21]


ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்திஆம்
எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை
ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.


[ 22]


ஈதென் றறிந்திலேன் இத்தனைக் காலமும்
ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென் றறியும் அறிவை யறிந்தபின்
ஈதென் றறியும் இயல்புடை யோனே.


[ 23]


உயிர்க்குயி ராகிஉருவாய் அருவாய்
அயர்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதனுல காதி
இயற்பின்றேல் எல்லாம் இருள் மூடம் ஆமே.


[ 24]


சத்தி யிராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறு பாச மலம்ஐந்தோ(டு) ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.


[ 25]


Go to top
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதத் துரியத்தில் தான்உறல்
சாக்கிரா தீதத்தில் ஆணவந் தான்விடச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.


[ 26]


மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப் பற்றால் மதிஒளி யாமே.


[ 27]


திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
அகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால்இரண் டாமே.


[ 28]


கதறிப் பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி யெழுகின்ற சிந்தையை நீரும்
விதறு படாமூனம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே.


[ 29]


நனவகத் தேஒரு நாலைந்தும் வீடா
கனவகத் தேஉட் கரணங்க ளோடும்
உனவகத் தேநின் றுதறிஉட் புக்கு
நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.


[ 30]


Go to top
நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமா திகள்உற்றுச்
சென்று துரியாதீ தத்துச் சிலகாலம்
நின்று பரனாகி நின்மலன் ஆமே.


[ 31]


ஆனஅவ் வீச னதீதத்தில் வித்தையாம்
தான்உல குண்டு சதாசிவ மாய்சத்தி
மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோன மடைந்தொலி மூலத்த னாமே.


[ 32]


மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக்
கண்டுகண் டுள்ளே கருதிக் கழிகின்ற
விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத்
தண்டமுந் தாமா யகத்தினுள் ளாமே.


[ 33]


போதறி யாது புலம்பின புள்ளினம்
மாதறி யாவகை நின்று மயங்கின
வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை
சூதறி வார்உச்சி சூடிநின் றானே.


[ 34]


கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே
பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
வருத்தறிந்தேன் மனம் மன்னிநின் றானே.


[ 35]


Go to top
ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்(து)
ஆன விதிமூலத் தான்அத்தில் அவ்விளக்(கு)
ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.


[ 36]


உண்ணாடும் ஐவர் குமண்டை ஒதுங்கிய
விண்ஆட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த் (து)ஐவர் கூடிய சந்தியின்
கண்நாடி காணும் கருத்ததென் றானே.


[ 37]


அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறி வாகான்
அறியாத வற்றை அறிவானைக் கூட்டி
அறியா தறிவானை யாரறி வாரே.


[ 38]


துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம். அந்நன வாதி
பெரியன கால பரம்பிற் றுரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே.


[ 39]


மாயையிற் சேதனம் மன்னும் பகுதியான்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமாய் யோனியுள்
தோயும் அநித்தம் துரியத்துள் சீவனே. 7,


[ 40]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song